அந்நியர்களை நம் வீட்டுக்குள் வரவேற்றால், அதன் விளைவுகளையும் நாம்தான் எதிர்கொள்ள நேரிடும். இந்த கட்டுரையில், இலங்கையில் அண்மையில் அனோனிமஸ்க்கு விடுக்கப்பட்ட அழைப்பு மற்றும் அதன் பின் நடைபெற்ற நிகழ்வுகள் ஆகியவற்றின் காலவரிசையை காணவுள்ளோம். அதன் தாக்கம் குறித்து மதிப்பீடு செய்யவுள்ளதோடு, இவ்வியக்கத்தின் தொழிற்படு முறை தொடர்பிலும் காணவுள்ளோம்.
செய்தியும் ஆய்வும் நதீம் மஜீத் ஆய்வும் தரவு காட்சிப்படுத்தல்களும் இஷான் மரிக்கார் செம்மையாக்கம் ஆயிஷா நஸீம், ரினீகா டி சில்வா மொழிபெயர்ப்பு செல்வராஜா கேசவன்
அனோனிமஸுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு
இலங்கை அரசாங்கத்திற்கும் ராஜபக்சக்களுக்கும் எதிரான சீற்றம் மார்ச் மாத இறுதியில் கட்டுக்கடங்காமற் போனது. போராட்டங்கள் தீவிரமடைந்த அதே வேளையில், ராஜபக்ச குடும்பத்தினதும் அவர்களது கூட்டாளிகளினதும் வெளிநாட்டு சொத்து விபரங்களை அம்பலப்படுத்துமாறு இணைய வழியில் ஹேக் செயற்பாட்டாளர் குழுவான அனோனிமஸிடம் வேண்டுகோள்கள் விடுக்கப்படத் தொடங்கின.
இந்தக்குழுவை மேற்படி வேண்டுகோள்கள் போய்ச்சேர்ந்து விட்டிருந்தன என்பதற்கான முதல் அறிகுறி குறித்த இயக்கத்துடன் தொடர்புடையதொரு பெரிய சமூக ஊடக கணக்கான @YourAnonNews இடமிருந்து கிடைக்கப்பெற்றது. இந்திய ஊடகமொன்றின் இலங்கை அவசர நிலை பிரகடனம் மற்றும் ஊரடங்கு பற்றிய பதிவொன்றினை மேற்கோளிட்டு ஏப்ரல் 3 ஆந்திகதி அக்கணக்கு பதிவொன்றினை இட்டிருந்தது.
அதைத்தொடர்ந்து அனோனிமஸுடன் தொடர்புடையதென கூறும் முகநூற் கணக்கொன்றிலிருந்து பதிவிடப்பட்ட பதிவொன்று மக்களிடையே பேசு பொருளாகியிருந்தது. 102 மெற்றிக்தொன் நிறையுள்ள ‘அச்சிடப்பட்ட பொருட்கள்’ ஶ்ரீலங்கன் எயார்லைன் விமானம் மூலம் உகண்டாவின் என்ரப்பே சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது தொடர்பில் அப்பதிவு கேள்வியெழுப்பியிருந்தது.
குறித்த சந்தேகத்திற்கிடமான சரக்கு பரிமாற்றத்தில் பரிமாற்றப்பட்டது உகண்டா நாட்டு நாணயத்தாள்கள் எனவும், அது ‘‘இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இருந்து பணத்தினை அச்சிட்டு உலக சந்தைக்கு ஏற்றுமதி செய்யும் ஒரு சர்வதேச பண அச்சு நிறுவனத்தால்’’ நடாத்தப்பட்டது எனவும் தி சன்டே ரைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டது.
அனோனிமஸுடன் தொடர்புடையதென கூறும் த கோஸ்ட் அல்லது த கோஸ்ட் ஸ்குவாட் எனப்படும் @GhostClanOfcl டுவிட்டர் கணக்கு குறித்த பரிமாற்றத்தில் கொண்டு செல்லப்பட்டவை அமெரிக்க டொலர்களே என கூறியிருந்தது.
குறித்த கணக்கு அமெரிக்க டொலர்கள் விமானத்தில் ஏற்றப்படும் காணொளியொன்றை பதிவிட்டு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச 12 நாளுக்குள் பதவி விலக வேண்டும் எனும் நிபந்தனை உள்ளிட்ட நிபந்தனை பட்டியலொன்றையும் வெளியிட்டிருந்தது.
ஏப்ரல் 12 ஆந்திகதி @LatestAnonPress இனால் #OpSriLanka (இலங்கை நடவடிக்கை) பிரகடனப்படுத்தப்பட்டது. அத்துடன் இணைக்கப்பட்டிருந்த படங்கள் மூலம் gov.lk இணையத்தளங்களை முடக்குவது அவர்களது இலக்கு என தெரிந்தது.
இதுவே #OpSriLanka முதன்முதலில் குறிப்பிடப்பட்ட தருணமாகும். இதனுடன் தொடர்புடையதாக, பல்வேறுபட்ட டிடிஒஎஸ் (சேவை மறுப்புத் தாக்குதல்) தாக்குதல்கள் பல இணையத்தளங்கள் மீது தொடுக்கப்பட்டன.
நாங்கள் சமூக ஊடக பதிவுகளை நேரடியாக அனோனிமஸின் பதிவு எனக்கூறாது, அனோனிமஸுடன் ‘தொடர்புடையதாக கூறும்’ கணக்கின் பதிவு எனக்கூறுவதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். அதற்கு ஒரு காரணம் உள்ளது. அவ்வியக்கத்தின் மையப்படுத்தப்படாத இயல்பு காரணமாக அவர்கள் ஒவ்வொரு முறை ஒரு நடவடிக்கைக்கும் அழைப்பு விடுக்கும் போதும் அழையா விருந்தாளிகள் சிலரும் குறித்த நடவடிக்கைக்கு சமூகமளிப்பது வழமை.
#OpSriLanka - அதகளம் ஆரம்பம்
தற்போது வரை மேற்படி செயற்பாட்டு இயக்கமானது ஒருங்கிணைப்பொன்று இன்றியே செயற்படுகிறது, இருப்பினும் #AnonymousSaveSriLanka எனும் குறியீடானது பரவலான பயன்பாட்டிற்கு வெகு விரைவாக வந்து ஏப்ரல் 21 இல் உச்சகட்ட பயன்பாட்டை அடைந்திருந்தது.
#GiveOurMoneyBack எனும் கோரிக்கையை மேற்படி பதிவுகளில் பல கொண்டிருந்தன. இதிலிருந்து, அனோனிமஸ் கொள்ளையடிக்கப்பட்ட நாட்டின் சொத்துகளின் இருப்பிடத்தை வெளிப்படுத்தும் என்பதே மேற்படி பதிவுகளை இட்டவர்களின் எதிர்பார்ப்பாய் இருந்தது என்பது தெரிகிறது. அரச வலைத்தளங்களை (gov.lk) முடக்குவதன் மூலம் மேற்படி எண்ணம் எவ்வாறு நிறைவேறும் என்பதுதான் இங்கு எழுகின்ற ஐயம்.
மேற்படி கோரிக்கைகளின் பெறுபேறுகள் என்ன? ஏப்ரல் 20 #OpSriLanka பிரகடனப்படுத்தப்பட்ட அதே நாளில் @LulzSecSL எனும் டுவிட்டர் பயனர் தான் கோஸ்ட் கிளான் மூலமாக அனோனிமஸுடன் தொடர்புடையவர் என கூறிக்கொண்டே இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) தரவுகளை வெளியிட்டார்.
இத்தகவல்களில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு பெற்றிருந்த முகவர்களின் விபரங்கள், மின்னஞ்சல்கள், பயனர் பெயர்கள், கடவுச்சொல்கள் ஆகியன உள்ளடங்கும். இது இலங்கையின் அடிமட்ட அரச ஊழியர்கள் மற்றும் வெளிநாட்டில் வேலை செய்யும் இலங்கையர்களின் தனியுரிமை மீதான மீறலாகும்.
ஊடகங்களில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மீதான இணையவெளி தாக்குதலே அதிகம் பேசப்பட்டிருந்த போதும் எம்மால் மேலும் 30 வெவ்வேறு தாக்குதல்களை அடையாளங் காணமுடிந்துள்ளது. இத்தாக்குதல்களுக்கு இலக்கானவைகளில், அரச மற்றும் ராஜபக்ச சார்பு தனியார் ஊடகங்கள் தொடங்கி அரச இணையத்தளங்கள், ஒரு இணையவழி வணிக நிறுவனம் கூட உள்ளடங்கும்.
இலக்குகளும் இழப்புகளும்
கணக்கு | டிடிஒஎஸ் | ஹக் செய்யப்பட்டது | தகவல் திரட்டு |
SRIHUBDEV | 15 | 0 | 0 |
ANOVNI1 | 5 | 0 | 0 |
YourAnonSpider | 0 | 1 | 1 |
@mrdark3366 | 1 | 0 | 0 |
@Anon_242424 | 1 | 0 | 0 |
@_barbby | 2 | 0 | 0 |
@Anonymous_Link | 1 | 0 | 0 |
@YourAnonNewsE | 1 | 0 | 0 |
எம்மால் அடையாளங்காணப்பட்ட பெரும்பாலான தாக்குதல்கள் டிடிஒஎஸ் தாக்குதல்களாகவே இருந்தன. இவற்றுள் 15 தாக்குதல்கள் நிகழ்த்தியதாக கோஸ்ட் கிளானுடன் தொடர்புடையவர் எனக் கூறிக்கொள்ளும் மற்றொரு டுவிட்டர் பயனரான @SRIHUBDEV உரிமை கோரியிருந்தார். தாக்குதலுக்குள்ளான இணையத்தளங்களில் namalrajapaksa.com, police.lk, president.gov.lk, swarnavahini.lk, hiru.lk, lanwacement.com, visittamileelam.com மற்றும் உகண்டா நாட்டு வங்கி ஒன்றின் இணையத்தளமும் உள்ளடங்கும்.
rupavahini.lk, itn.lk, derana.lk, hirutv.lk, மற்றும் parliament.lk ஆகிய ஐந்து இணையத்தளங்கள் மீது நாடாத்தப்பட்ட டிடிஒஎஸ் தாக்குதல்களுக்கு @ANOVNI1 என்ற பயனர் உரிமை கோரியிருந்தார்.
சப்ரகமுவ மாகாண நிர்வாக இணையதளத்தினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது தானே என @YourAnonSpider என்ற பயனர் உரிமை கோரியிருந்தார். அந்த இணையதளத்தில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தகவல் திரட்டு பதிவேற்றப்பட்டிருந்தது.
பின்வரும் வரைபு தாக்கப்பட்ட இணையத்தளங்களின் வகைகளை காட்சிப்படுத்துகிறது, தாக்கப்பட்ட அனைத்தும் அரசுக்கு சொந்தமானவை அல்ல.
நாம் அடையாளங்கண்ட தாக்குதல்களில் ஆறு தாக்குதல்கள் தனியார் வணிகங்கள் மீது நிகழ்த்தப்பட்டுள்ளது. ராஜபக்சக்களுடன் தொடர்பு உள்ளதாக கூறப்பட்டிருப்பினும் இத்தாக்குதல்களால் அவற்றின் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்குத்தான் தற்போது ஆபத்து ஏற்பட்டடுள்ளது.
குறித்த தாக்குதலாளிகள் அனோனிமஸுடன் தொடர்புடையவர்களா என எம்மால் உறுதி செய்ய முடியவில்லை. இதனால், இவ்வியக்கத்தை சட்டவிரோதமானதாய் ஆக்க முயல்பவர்கள் கூட மேற்படி தாக்குதல்களை நடாத்தி இருக்கலாம் என்ற ஐயமும் எழாமல் இல்லை.
மேற்படி தாக்குதல்களினதும் தரவு கசிவுகளினதும் விளைவுகளை அளவிடுவது கடினமாகும். இவ்வாறான தரவு கசிவுகளினால் நமது தரவுகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட மோசடிகளுக்கு நாம் உள்ளாவதற்கு வாய்ப்புள்ளது என்பது மாத்திரம் மறுக்க முடியாத உண்மையாகும். இணையத்தின் இருண்ட பக்கத்தில் (dark web) தரவுத்திரட்டுகள் தொடர்ச்சியாக விற்கப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக சில வேளைகளில் நிதி மோசடிகளும் இடம் பெறுகின்றன.
இனி கொஞ்சம் அழையா விருந்தாளிகள் பற்றி அலசுவோம்.
குட்டையை குழப்பல்
தாக்குதல்கள் ஒரு புறம் தொடர்ந்து கொண்டிருக்க மறுபுறம் போராட்டங்கள் வலுவடைந்து கொண்டிருந்தன. மேலுமொரு வேடிக்கையும் நிகழக் காத்திருந்தது. வாட்சப் மற்றும் இதர சமூக வலைத்தளங்களில் செய்தியொன்று தீயாக பரவத்தொடங்கியது. லங்கா இ நியூஸ் எனும் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்ட மேற்படி செய்தியில், ராஜபக்சக்களினது சொத்துக்கள் மற்றும் பினாமிகள் ஆகிய விபரங்கள் எனக்கூறப்பட்டவை பட்டியலிடப்பட்டிருந்தன.
இந்தப்பதிவுகள் வெளியிடப்பட்ட கணக்குகள் அப்பதிவுகளில் மேற்படி இயக்கத்தினை குறிப்பிட்டிருந்த போதிலும் அவை எதுவும் அனோனிமஸுடன் தமக்கு தொடர்பு இருப்பதாக குறிப்பிடவில்லை.
மேற்படி சொத்து விபரங்களில், தன்சானியாவில் உள்ள வைர சுரங்கங்கள், மாலைதீவுகளில் உள்ள சிறு தீவுகள், நிலைத்தன்மை மிக்க இலங்கை நிறுவனங்கள் பலவற்றில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள், ஏன் அமெரிக்காவில் உள்ள ஆபாச பட நிறுவனங்களின் சொத்துரிமைகள் கூட குறிப்பிடப்பட்டிருந்தன.
ராஜபக்சக்களினது பினாமிகள் என அப்பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள பல முக்கிய புள்ளிகளில் ராஜபக்சக்களின் நிர்வாகம் மீது விமர்சனங்கள் வைத்தோரும் இருப்பதுதான் வினோதமாய் உள்ளது.
மேற்படி முரண்பாடான கூற்றுக்களை உறுதிப்படுத்தவல்ல ஆதாரங்கள் எதுவும் இல்லாத போதும் இக்கூற்றுக்களை தெரிவித்த மூலத்தின் நம்பகத்தன்மை மீது ஐயம் நிலவுகின்ற போதிலும் மேற்படி செய்திகள் காட்டுத்தீயாய் பரவுவதை அவற்றால் தடுக்க முடியவில்லை. வட்சப்பில் ‘அதிக தடவை பகிரப்பட்டது’ (Forwarded many times) என்ற நிலைய அடைந்த மேற்படி செய்தி பல மீம்களிலும் இடம்பெறத் தொடங்கியது.
மேற்படி தரவு கசிவு அனோனிமஸிடம் இருந்து வந்ததா என எம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை என்ற போதிலும், மேற்படி செய்தி வேறெந்த தரவுத்திரட்டுகளுடனும் தொடர்புபடாத படியால், இது நம் மக்களின் உறுதிப்படுத்தல் கோடலை (confirmation biases) [2] பயன்படுத்தி வதந்தி பரப்பும் நடவடிக்கையாகவே இருந்திருக்க வாய்ப்புள்ளது.
வேறு மொழியில் சொல்வதானால் அத்தனையும் அழையா விருந்தாளிகளின் சேட்டைகளே.
மழை விட்டும் தூவானம் விட்டபாடில்லை
#OpSriLanka வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சொத்துக்கள் தொடர்பில் ஏதாவது ஆதாரபூர்வமான தகவல்களை வெளிப்படுத்தியதா? இல்லை.
டிடிஓஎஸ் தாக்குதல்கள் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆகியவற்றின் தகவல் திரட்டுகளை வைத்து, அனோனிமஸுக்கு மக்கள் அழைப்பு விடுத்ததற்கான முக்கிய காரணமான வெளிநாட்டு சொத்துக்களை வெளிப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது.
அப்படியானால் எதைத்தான் நாம் இதன் மூலம் சாதித்திருக்கின்றோம்? வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தரவுத்திரட்டினை வெளிப்படுத்தி நாம் சாதித்தது தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்தியது மட்டுந்தான்.
மற்றொரு புறம் நாட்டின் இணையப்பாதுகாப்பு அணிகளின் வேலைப்பழுவை மேற்படி தாக்குதல்கள் மேலும் அதிகரிக்கும்.
இலங்கை அரசின் தகவல் தொழிநுட்ப உட்கட்டமைப்பு மிகவும் பலவீனமானது என்பதுடன் இதற்கு முன்பே பல தடவைகள் தகர்க்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பெப்ரவரி மாதங்கூட .lk களப்பதிவு ஹக் செய்யப்பட்டு அத்தகவல்கள் இணையத்தின் இருண்ட பக்கத்தில் வெளியிடப்பட்டது.
அரசின் இணைய உட்கட்டமைப்பை மீட்பதற்கும் மீளக்கட்டியெழுப்புவதற்கும் ஆகின்ற செலவுகளை தாங்கப்போவதும் பொது மக்களாகிய நாம்தான் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இதன் விளைவுகள் மழை விட்டாலும் விடாத தூவானம் போல நம்மை தொடரப் போவது தற்போது உங்களுக்கு விளங்கியிருக்கும்.
மூடுபனிக்கு மத்தியில் தெரியும் மெல்லிய ஒளிக்கீற்று
வெளிநாட்டில் குவிக்கப்பட்டுள்ள சொத்துக்களை பற்றித் தேடுவோருக்கு நல்ல செய்தி என்னவென்றால் அவை தொடர்பான எண்ணற்ற விபரங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.
2015 ஆம் ஆண்டு, புலனாய்வு பத்திரிகையாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு (ICIJ), சுவிஸ் லீக்ஸ் என்ற பெயரில் 40 இலங்கையர்களின் சுவிஸ் வங்கி கணக்குகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பணத்தினை பற்றி வெளிப்படுத்தினர். அதே வேளையில் பனாமா பேப்பர் ஊழல் தகவல் கசிவில் சர்ச்சைக்குரிய வணிகரான நிஸங்க சேனாதிபதி மற்றும் அவரது நிறுவனமான அவன்ட் கார்ட் தொடர்பான தகவல்கள் இடம்பெற்றன.
புலனாய்வு பத்திரிகையாளர்களின் சர்வதேச கூட்டமைப்பினால் 2021 ஆம் ஆண்டு, பன்டோரா பேப்பர் ஊழல் தகவல் கசிவு தொடர்பாக நடத்தப்பட்ட புலனாய்வில், முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் நிருபமா ராஜபக்ச மற்றும் அவரது கணவர் திருக்குமார் நடேசன் ஆகியோர் போலி நிறுவனங்களை பயன்படுத்தி லண்டன் மற்றும் சிட்னி நகரங்களில் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளை கொள்வனவு செய்தது தெரிய வந்தது.
இவை நேர்மையான வழியில் ஈட்டப்பட்டவையாக கூட இருக்க முடியும் என்றாலும் அவை தொடர்பில் எதுவித விசாரணைகளும் மேற்கொள்ளப்படாது இருப்பது குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
இலங்கையில் ஊழல் பற்றிய எமது முதலாவது தரவு செயற்றிட்டத்தில், சட்டத்தில் இருந்து தப்பித்த முக்கிய வழக்குகள் தொடர்பில் குறிப்பிட்டிருந்தோம்.
அனோனிமஸ் இயக்கம் சொத்துக்களை மீட்டெடுப்பதை செய்வதில்லை. ஊழலுக்கு எதிரான சர்வதே கூட்டமைப்பான ட்ரான்ஸ்பரன்சி இன்ரநேசனல் ஶ்ரீலங்கா நிறுவனம் சொத்துக்களை மீட்டெடுப்பது தொடர்பில் சிறப்பான விளக்கமொன்றை வெளியிட்டுள்ளது. எம்மில் பலருக்கு இருக்கின்ற கேள்விகளான, இலங்கை தனது திருடப்பட்ட சொத்துக்களை எப்படி மீளப்பெறலாம்? அதற்குரிய அதிகாரம் யாரிடம் உள்ளது? அதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்? போன்ற கேள்விகளுக்கு அவ்விளக்கம் பதிலளிக்கிறது.
எனவே வீட்டுக்குள் அழையா விருந்தாளிகளை உதவி பெறுவதற்காக அனுமதிக்க முன், எம்மிடம் உள்ள தகவல்கள் மற்றும் வளங்களை வைத்து நாம் என்ன செய்ய முடியும் என்பதை ஒரு கணம் சிந்தித்து பாருங்கள்.
அடிக்குறிப்புகள்
1. DDos attacks explained:
2. Britt MA, Rouet J-F, Blaum D, Millis K. A Reasoned Approach to Dealing With Fake News. Policy Insights from the Behavioral and Brain Sciences. 2019;6(1):94-101. doi:10.1177/2372732218814855
3. Olson P. We Are Anonymous: Inside the Hacker World of Lulzsec, Anonymous, and the Global Cyber Insurgency. New York: Back Bay Books; 2013.
தரவுகள்
Frequency of Attacks by Sector
Sector | Number of Attacks |
State | 14 |
State Media | 5 |
Private Media | 5 |
Private Business | 6 |
Anonymous #OpSriLanka Timeline
Date | Time | Handle | Link | Site Affected | Type |
4:22 PM | SRIHUBDEV | DDOS/Site-Takedown | |||
@April 30, 2022 | 5:48 PM | SRIHUBDEV | DDOS/Site-Takedown | ||
@April 29, 2022 | 9:53 AM | SRIHUBDEV | DDOS/Site-Takedown | ||
@April 28, 2022 | 9:20 AM | SRIHUBDEV | DDOS/Site-Takedown | ||
@April 25, 2022 | 10:49 AM | SRIHUBDEV | DDOS/Site-Takedown | ||
@April 23, 2022 | 9:33 AM | SRIHUBDEV | DDOS/Site-Takedown | ||
@April 23, 2022 | 2:58 PM | SRIHUBDEV | DDOS/Site-Takedown | ||
@April 21, 2022 | 9:23 AM | SRIHUBDEV | DDOS/Site-Takedown | ||
@April 17, 2022 | 9:29 AM | SRIHUBDEV | DDOS/Site-Takedown | ||
@April 13, 2022 | 9:00 AM | SRIHUBDEV | DDOS/Site-Takedown | ||
@April 7, 2022 | 9:32 AM | SRIHUBDEV | DDOS/Site-Takedown | ||
@April 7, 2022 | 9:30 AM | SRIHUBDEV | DDOS/Site-Takedown | ||
@April 7, 2022 | 9:26 AM | SRIHUBDEV | DDOS/Site-Takedown | ||
@April 5, 2022 | 1:18 PM | SRIHUBDEV | DDOS/Site-Takedown | ||
@April 4, 2022 | 7:16 PM | SRIHUBDEV | DDOS/Site-Takedown | ||
@January 5, 2022 | 6:56 PM | DDOS/Site-Takedown | |||
@January 5, 2022 | 6:56 PM | DDOS/Site-Takedown | |||
@January 5, 2022 | 6:56 PM | DDOS/Site-Takedown | |||
@January 5, 2022 | 6:56 PM | DDOS/Site-Takedown | |||
@April 5, 2022 | 2:47 PM | DDOS/Site-Takedown | |||
@April 30, 2022 | 3:34 PM | Compromised | |||
@February 5, 2022 | 5:41 AM | Data Dump | |||
@January 6, 2022 | 7:54 PM | AnonymousItalia | |||
@March 4, 2022 | 8:01 AM | @mrdark3366 | DDOS/Site-Takedown | ||
@April 20, 2022 | 7:55 AM | @Anon_242424 | DDOS/Site-Takedown | ||
@April 4, 2022 | 2:37:00 PM | @_barbby | DDOS/Site-Takedown | ||
@April 20, 2022 | 11:30:00 PM | @Anonymous_Link | DDOS/Site-Takedown | ||
@May 4, 2022 | 12:42 AM | DDOS/Site-Takedown | |||
@April 23, 2022 | 9:33 AM | SRIHUBDEV | DDOS/Site-Takedown | ||
@March 4, 2022 | 1:57 AM | DDOS/Site-Takedown |